Friday, June 25, 2021

Wednesday, June 9, 2021

Day 10 இருவாச்சி

 


இருவாச்சி

ஆங்கிலத்தில் இக்குடும்பத்தை "ஹார்ன்பில்" என அழைப்பார்கள். "ஹார்ன்பில்" (Hornbill) என்பது ஒருவகையான மரம் ஆகும். இந்த மரத்தில் தான் இப்பறவை கூடுகட்டுகிறது. அதனால் இப்பறவைக்கு ஹார்ன்பில் என பெயர் சூட்டியுள்ளார்கள். இவை அளவில் சற்று பெரிதானவை. பறக்கும்போது ஒரு உலங்கு வானூர்தி பறப்பதைப் போல இருக்கும். அதே போல ஒலி எழுப்பக்கூடியவை. பெரிய அலகை உடையது. அலகுக்கு மேலே கொண்டை (காஸ்க்) போன்ற அமைப்பு இருக்கும். இது பறவைக்கு இருவாய்கள் இருப்பதைப் போன்ற தோற்றத்தைத் தரும். இவை சுமார் 30 முதல் 40 ஆண்டுகள் வாழக்கூடியது.

பிப்ரவரி மாதம் முதல் மே மாதம் வரை இனப்பெருக்க காலமாகும்.


இருவாச்சி பறவைகள் இணையோடு வாழக்கூடியவை. இனப்பெருக்க காலத்தில் இரண்டு பறவைகளும் சேர்ந்து மிகவும் உயரமான மரங்களில் கூட்டைத் தேர்வு செய்யும். கூடு என்பது மரங்களில் உள்ள பொந்துகள்தான். பெண் பறவை பொந்துக்குள் சென்று அமர்ந்தவுடன் ஆண் பறவை தனது எச்சில் மற்றும் ஆற்று படுகைகளில் இருந்து சேகரிக்கும் ஈரமான மண்ணைக் கொண்டு கூட்டை மூடிவிடும். பெண் பறவைக்கு உணவு கொடுக்க ஒரு சிறிய துவாரத்தை மட்டும் விட்டுவிடும்.

பெண் பறவை தனது இறக்கை முழுவதையும் உதிர்த்து ஒரு மெத்தை போன்ற தளத்தை அமைத்து அதன் மேல் ஒன்று முதல் 3 முட்டைகள் வரை இடும். சுமார் 7வாரம் கழித்து முட்டைகள் பொரிந்துவிடும். குஞ்சுகள் பிறந்தவுடன் பெண் பறவை கூட்டை உடைத்துக் கொண்டு வெளியே வரும். அதுநாள் வரை ஆண் பறவை சிறிய துவாரம் வழியே பெண் பறவைக்குப் பழக்கொட்டைகள், பூச்சிகளை உணவாக கொண்டுவந்து ஊட்டும். குஞ்சுகள் பொரிந்தபின்னர் ஆண் மற்றும் பெண் பறவைகள் இணைந்து குஞ்சுகளுக்கு உணவு ஊட்டும். இப்பறவைகளை மழைக்காட்டின் குறியீடு என்பர்.
அனைத்துண்ணிகளான இருவாச்சிகள் பழங்கள், பூச்சிகள், சிறு விலங்குகள் முதலியவற்றை உண்ணும். மேலும் இவற்றின் நாக்கு குட்டையாக இருப்பதால் இவற்றால் இரையை விழுங்க இயலாது. எனவே உணவை அலகின் நுனியில் இருந்து தூக்கிப்போட்டு சிறிது சிறிதாக அலகின் உட்பகுதிக்கு நகர்த்தும்.
உலகம் முழுவதும் 54 வகைகள் இருக்கின்றன. இந்தியாவில் 9 வகை இருவாச்சிகள் உள்ளன. தென்னிந்தியாவில் 4 வகை இருவாச்சிகள் காணப்படுகின்றன. கேரள மாநிலத்தில் இருவாச்சிகளை மாநிலப் பறவையாக அறிவித்துள்ளனர். இலக்கியங்களில் இவற்றை மலை முழுங்கான் என்று குறிப்பிட்டுள்ளனர்.

தமிழகத்தில் காணப்படும் நான்கு வகை இருவாச்சிப்பறவைகள் 1. பெரும் பாத இருவாச்சி, 2. மலபார் இருவாச்சி, 3.சாம்பல் நிற இருவாச்சி, 4. மலபார் பாத இருவாச்சி. இவை மேற்குத் தொடர்ச்சி மலையில் தென்னிந்தியாவில் காணப்படுபவை.

பெரும் பாத இருவாச்சி: அலகு மற்றும் அலகுக்கு மேலே உள்ள பகுதி மஞ்சள் நிறத்தில் இருக்கும். கருப்பு இறக்கையில் வெள்ளைக் கோடுகள் இருக்கும் சிறிய பகுதி மட்டும் மஞ்சள் நிறத்தில் காணப்படும். மற்ற மூன்று வகைகளைக் காட்டிலும் இந்த வகை சற்று பெரிதாக இருக்கும்.

மலபார் பாத இருவாச்சி: இது பார்ப்பதற்குக் பெரும் பாத இருவாச்சி போல இருந்தாலும் அளவில் சற்று சிறியதாக இருக்கும். அலகில் வெள்ளை கலந்த மஞ்சள் நிறம் இருக்கும். கொண்டை பகுதியில் கருப்பு நிறம் காணப்படும். கருப்பு மற்றும் வெள்ளை நிறம் கலந்த உடலைப் பெற்றிருக்கும்.

இந்திய சாம்பல் நிற இருவாச்சி: மேலே குறிப்பிட்ட இரண்டைக் காட்டிலும் அளவில் சிறியதாக இருக்கும். சாம்பல் வண்ணத்தில் காணப்படும்.

மலபார் சாம்பல் நிற இருவாச்சி: இவற்றுக்குக் கொண்டைப் பகுதி இருக்காது. சாம்பல் நிறத்தில் காணப்படும்

இவை தவிர, மேலும் 5 வகைகள் இந்தியாவில் உள்ளன. அவை 1. நார்கொண்டான் இருவாச்சி (அந்தமான் தீவுகளில் காணப்படுவன) 2. வளையமுள்ள இருவாச்சி, 3.ரூஃவெஸ்ட் நெக்டு இருவாச்சி, 4. பழுப்பு இருவாச்சி (வடகிழக்கு இந்தியாவில் காணப்படுவன) 5. இந்திய பாத இருவாச்சி - நேபாளம் மற்றும் இமயமலையில் காணப்படுகின்றன.
இருவாச்சிப் பறவை இந்தியாவில் உள்ள  கேரளா, அருணாச்சலப் பிரதேசம் மற்றும் மியான்மர் நாட்டில் உள்ள சின் மாநில அரசுகளின் மாநிலப் பறவையாகும்.






Tuesday, June 8, 2021

DAY 9 - QUIZ CONTENT - விமானம் உருவான கதை - ரைட் சகோதரர்கள்

 விமானம் உருவான கதை - ரைட் சகோதரர்கள் (வரலாற்று நாயகர்கள்)

        கிறிஸ்துவுக்குப் பின் நாம் இருபது நூற்றாண்டுகளை கடந்துவிட்டோம் அவற்றில் இருபதாம் நூற்றாண்டில்தான் அதிகமான அறிவியல் கண்டுபிடிப்புகள் நிகழ்ந்தன. அதனால்தான் இருபதாம் நூற்றாண்டை 'அறிவியல் நூற்றாண்டு' என்று பதிந்து வைத்திருக்கிறது வரலாறு. மனித வாழ்க்கையை மேம்படுத்திய ஆயிரக்கணக்கான கண்டுபிடிப்புகளை கடந்த நூற்றாண்டில் உலகம் சந்தித்தது. அவற்றுள் இரண்டு கண்டுபிடிப்புகள் இந்த உலகையே ஒரு குக்கிராமமாக சுருக்க உதவின. ஒன்று அலெக்ஸாண்டர் கிரகம்பெல் கண்டுபிடித்த தொலைபேசி, மற்றொன்று:

     பறவையைக் கண்டான் விமானம் படைத்தான்”  ஆம் உண்மையிலேயே பறவைகள் பறக்கும் அழகைக் கண்டு வியந்து நாமும் அவற்றைப்போல் பறந்தால் நன்றாக இருக்குமே!! ஏன் மனிதனும் பறக்க முடியாது? என்று கேள்வி கேட்டு பல ஆண்டு காலம் உறுதியோடு உழைத்து தங்கள் உயிரையும் பணயம் வைத்து கடைசியில் தங்கள் கனவை நனவாக்கிய இரண்டு வரலாற்று நாயகர்களின் கதையைத் தெரிந்துகொள்வோம்...


        மனுகுலத்திற்கு பறக்கும் சக்தியைக் கொடுத்த அந்த அபூர்வ சகோதரர்கள் ஆர்வில் ரைட் மற்றும் வில்பர் ரைட்.இவர்களை சுருக்கமாக ரைட் சகோதரர்கள் என்று அழைக்கிறது வரலாறு. அமெரிக்காவில் இண்டியானா மாநிலத்தில் மெல்வில் எனும் ஊரில் 1867 ஆம் ஆண்டு ஏப்ரல் 16ந்தேதி பிறந்தார் வில்பர் ரைட், நான்கு ஆண்டுகள் கழித்து 1871 ஆம் ஆண்டு ஆக்ஸ்ட் 9ந்தேதி பிறந்தார் இளையவர் ஆர்வில் ரைட் இவர்களது தந்தை மில்டன் ரைட் ஒரு பாதிரியார். குடும்பம் ஏழ்மையான குடும்பம்தான் அதனால் உயர்நிலைப் பள்ளிப் படிப்பைக்கூட முடிக்க முடியவில்லை ரைட் சகோதரர்களால் ஆனால் இருவருக்குமே அறிவுத்திறனும், ஆற்றலும் நிறையவே இருந்தது. ஒருமுறை இருவருக்கும் பறக்கும் விளையாட்டுப் பொம்மை ஒன்றை பரிசாகத் தந்தார் தந்தை. மூங்கில் தக்கை, காகித அட்டை ஆகியவற்றால் செய்யப்பட்ட அந்த பொம்மை வீட்டின் கூரைவரை ஒரு ஹெலிகாப்டரைப்போல் பறந்து செல்லக்கூடியதாக இருந்தது. அப்போதே ரைட் சகோதர்கள் இருவருக்கும் அந்தப் பொம்மையை பெரிய அளவில் செய்தால் அதனை வெளியில் இன்னும் அதிக உயரத்தில் பறக்க விடலாமே என்ற எண்ணம் உதித்தது. முயன்று பார்த்தனர் தோல்வியைத் தழுவினர்.

         ரைட் சகோதரர்கள் இருவருக்குமே பறவைகள் பறக்கும் அழகைப் பார்த்து வியப்பதில் அலாதி பிரியம். அதே நேரத்தில் பலவிதமான பட்டங்களை செய்து பறக்க விட்டு மகிழ்வார்கள். அந்தப் பட்டங்களைப்போல், பறவைகளைப்போல் என்றாவது ஒருநாள் நாமும் வானத்தில் பறப்போம் என்ற நம்பிக்கையைச் சுமந்துகொண்டு பிழைப்புக்கு வழி தேடினர் இருவரும். ஒரு அச்சு நிறுவனத்தை தொடங்கி செய்தித்தாள்கள் அச்சிட்டனர் ஆனால் அது நொடித்துப்போனது. பின்னர் அப்போது சைக்கிள்கள் பிரபலமாக தொடங்கியிருந்ததால் அவர்கள் சைக்கிள் வியாபாரத்தில் ஈடுபட்டனர். அந்தச் சமயத்தில்தான்  Otto Lilienthal  என்ற ஜெர்மானியரைப் பற்றி கேள்விப்பட்டனர் இருவரும். தங்களுக்கு முன்பே பறப்பதைப்பற்றி சிலர் சிந்தித்திருக்கிறார்கள் என்பது அவர்களுக்கு அப்போதுதான் புரிந்தது. Otto தான் தயாரித்த கிளைடர் என்ற கருவியின் மூலம் இயந்திரம் எதுவுமின்றி காற்றின் சக்தியினால் ஆகாயத்தில் பறந்ததைப்பற்றி ரைட் சகோதரர்கள் கேள்விப்பட்டனர்.


            பறக்கும் இயந்திரத்தைக் கண்டுபிடித்துவிடலாம் என்ற நம்பிக்கை மேலும் வளர்ந்தது. அதைப்பற்றி மேலும் தெரிந்துகொள்ள முற்பட்டபோது Otto Lilienthal ஒரு பறக்கும் சோதனை முயற்சியில் விபத்தில் சிக்கி உயிரிழந்தார். ரைட் சகோதரர்கள் அதிர்ந்து போனாலும் அவர்களது நம்பிக்கை உதிர்ந்து போகவில்லை.  Smithsonian Institution என்ற அமைப்பின் தலைவருக்கு அவர்கள் கடிதம் எழுதினர். ரைட் சகோதரர்களின் ஆர்வத்தை உணர்ந்த கழகத்தின் தலைவர் Samuel P. Langley ஆகாயத்தில் பறக்க அதுவரை மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளைப் பற்றியும், வெற்றி தோல்விகளைப் பற்றியும், முன்னேற்றம் பற்றியும் இப்படி எல்லாத் தகவல்களையும் அனுப்பி வைத்தார்.ரைட் சகோதரர்கள் தங்களுக்கு முன் பலர் மேற்கொண்ட அரிய முயற்சிகளைக் கண்டு அவர்கள் மலைத்தனர். அந்த முயற்சிகளால் பெறப்பட்ட அறிவைக்கொண்டு வெவ்வேறு கோணங்களில் சிந்தித்தனர்.   

             ரைட் சகோதரர்கள் தங்கள் முதல் கிளைடரை 1900 ஆம் ஆண்டில் உருவாக்கினர் அதனை எங்கு சோதித்துப் பார்க்கலாம் என்று சிந்தித்தபோது பருவநிலை ஆராய்ட்சி நிலையத்திற்கு கடிதம் எழுதினர். வட கேரனொய்வில் உள்ள கிட்டிகாக் என்ற இடம் உகந்தது என்று பதில் வந்தது. அங்கு சென்று முயன்று பார்த்தனர் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கவில்லை. அப்போதும் அவர்கள் மனம் தளரவில்லை அடுத்த நான்கு ஆண்டுகள் தங்கள் வடிவமைப்பில் வெவ்வேறு மாற்றங்களை செய்வதும் சோதிப்பதுமாக இருந்தனர் ரைட் சகோதரர்கள். வேறு முன்மாதிரிகள் இல்லாததால் சிந்தித்து சிந்தித்து மாற்றங்கள் செய்தனர். ஒவ்வொரு முறையும் அவர்களால் முன்னேற்றத்தை உணர முடிந்தது. 1903 ஆம் ஆண்டு தாங்கள் தயாரித்த ஒரு கிளைடரில் தாங்களே உருவாக்கிய ஒரு மோட்டார் இயந்திரத்தைப் பொருத்தினர். அதில் விமானி குப்புற படுத்துக்கொண்டே தன் கை, கால்களால் இயக்கி அதனை பறக்கச் செய்ய வேண்டும்.


             1903 ஆம் ஆண்டு டிசம்பர் 14 ந்தேதி முதல் வெள்ளோட்டத்திற்கு தயாராக நின்றது ஃப்ளையர் என்று அவர்கள் பெயரிட்டிருந்த அந்த விமானம். யார் அதனை ஓட்டுவது என்று நாணயத்தை சுண்டிப் பார்த்ததில் வில்பருக்கு வெற்றிக் கிடைத்தது. இருவரின் மனமும் எதிர்பார்ப்பில் படபடக்க விமானத்தில் ஏறி குப்புற படுத்துக்கொண்டே விமானத்தைக் கிளப்ப முயன்றார் வில்பர், ஆனால் ஏதோ இயந்திரக் கோளாறு காரணமாக விமானம் நகரவே இல்லை. அப்போதுகூட அந்த சகோதரர்கள் மனம் தளர்ந்து போயிருந்தால் நமக்கு விமானம் கிடைக்காமல் போயிருக்கும். அடுத்த மூன்று நாட்கள் சிந்தித்து மேலும் சில மாற்றங்களை செய்தனர். 

             டிசம்பர் 17ந்தேதி மீண்டும் முயன்றனர். இம்முறை நாணயத்தை சுண்டிப்பார்த்ததில் ஆர்விலுக்கு அடித்தது யோகம்.விமானத்தில் வயிறுக் குப்புற படுத்துக்கொண்டு அமெரிக்க நேரப்படி காலை 10:35 க்கு விசையை இழுத்தார் ஆர்வில்.அந்த இயந்திர விமானம் ஆடி குலுங்கி, கனைத்து புகையைக் கக்கியபடியே மெதுவாக மேலே எழத்தொடங்கியது. அந்தரத்தில் அப்படியும் இப்படியுமாக ஆடி சரியாக 12 வினாடிகள் பறந்து 37 மீட்டருக்கு அப்பால் போய் பத்திரமாக தரையிறங்கியது.அந்த 12 வினாடிகள்தான் ஆகாய போக்குவரவுக்கு அடிகோலிய மந்திர வினாடிகள். வெற்றிக் களிப்பில் மிதந்தனர் ரைட் சகோதரர்கள். அவர்கள் பல நாட்கள் சிந்திய வியர்வைக்கு கடைசியில் பலன் கிட்டியது. அதேதினம் மேலும் மூன்று முறை ரைட் சகோதரர்கள் மாறி மாறி பறந்து சோதனைகள் செய்தனர். நான்காவது முறை வில்பர் 57 வினாடிகள் அந்தரத்தில் பறந்தார். அதற்கு அடுத்த ஆண்டே ரைட் சகோதரர்கள் நூறு அடி உயரம்வரை சென்று பன்னிரெண்டு மைல்கள் பறந்து சாதனை படைத்தனர். தொடர்ந்து பல முன்னேற்றங்களை செய்து 1908 ஆம் ஆண்டு 57 நிமிடங்கள் ஆகாயத்தில் பறந்து சாதனை படைத்தார் ஆர்வில்.


        அடுத்த சோதனையின்போது தன்னுடன் ஒரு பயணியை அழைத்துச் சென்றார் ஆனால் எதிர்பாராத விதமாக விமானத்தில் ஏற்பட்ட திடீர் கோளாறால் அது பூமியில் விழுந்து நொறுங்கியது. பயணி மாண்டார் ஆர்வில் தெய்வாதீனமாக உயிர் தப்பினார். ஆகாயப் போக்குவரவை சாத்தியமாக்கிய வில்பர் ரைட் 1912 ஆம் ஆண்டு மே மாதம் 30 ந்தேதியும் ஆர்வில் ரைட் 1948 ஆம் ஆண்டு ஜனவரி 30ந்தேதியும் இயற்கை எய்தினர். அந்த சகோதரர்கள் கிட்டிக்காக்கில் வடிவமைத்து உருவாக்கி முதன் முதலில் பயணம் செய்த அந்த விமானம் வாஷிங்டெனில் உள்ள தேசிய வான்வெளி அருங்காட்சியகத்தில் இன்றும் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. ரைட் சகோதரர்களின் அடிப்படையைக் கொண்டு பற்பல மாற்றங்களைக் கண்டு நவீன விமானம் உதயமானது. 


 “பயிற்சியும் முயற்சியும் இருந்தால்

ஒவ்வொரு மனிதனும் சாதனையாளனே”






Monday, June 7, 2021

Day -8 தரணி போற்றும் தஞ்சை பெரிய கோயில்

 தஞ்சை பெரிய கோயில்

இக்கோயில் தமிழகத்தின் மிக முக்கியமான சுற்றுலாத்தலமாக விளங்குகிறது. 1987 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனத்தால் (UNESCO) உலகப் பாரம்பரியச் சின்னமாக அறிவிக்கப்பட்டது.

  முதலாம் ராஜராஜ சோழன் என்றழைக்கப்பட்ட  சோழ அரசன் சோழர்களின் சிறப்பின் சின்னமாக விளங்கும் தஞ்சைப் பெருவுடையார் கோயிலைக் கட்டுவித்தார். இக்கோயிலின் கட்டுமான வேலைகள் முதலாம் இராஜராஜ சோழனின் 19 ஆவது ஆட்சியாண்டில் துவக்கப்பட்டு (கி.பி. 1003-1004), அவனது 25 ஆவது ஆட்சியாண்டில் முடிவுற்றது (கிபி 1009-1010). கோயிலின் வரைதிட்டத்தில், ஆள்கூற்று முறைமை, சமச்சீர்மை வடிவவியல் விதிமுறைகள் பின்பற்றப்பட்டுள்ளன. இதைத் தொடர்ந்து அடுத்த இரு நூற்றாண்டுகள் வரை கட்டப்பட்டக் கோயில்கள், சோழர்காலத்தில் செல்வத்திலும், கலையிலும் சிறப்புற்று விளங்கியதற்குச் சான்றாகவுள்ளன. சோழர்காலக் கட்டிடக்கலையின் புதுவித அமைப்பாகசதுரப் போதிகைகள் . கொண்டபன்முகத் தூண்கள் காணப்படுகின்றன.


தனித்துவமான திராவிடகட்டிடக்கலைக்கும், சோழர்களின் ஆட்சி மற்றும் தமிழ் மக்களின் நாகரிகத்திற்கும் சான்றாக அமைந்துள்ள இக்கோயில், கட்டிடக்கலை, சிற்பக்கலை, ஓவியக்கலை, வெண்கலச் சிலையுருவாக்கம் ஆகியவற்றில் சோழர்களின் திறமைக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகவும் விளங்குகிறது.

காஞ்சியில் ராஜசிம்மனால் . கட்டப்பட்ட  கயிலாயநாதர் கோயில் ராஜராஜனை மிகவும் கவர்ந்தது. அதே போல் ஒரு கோவிலைக் கட்ட எண்ணிய இராஜராஜன் தஞ்சையில் பெரிய கோவிலைக் கட்டினான். பெரியகோவிலின் அமைப்பு, திருவாரூர் தியாகராஜர் கோவிலில் உள்ள அசலேஸ்வரர் சந்நிதியின் மாதிரியைக் கொண்டு உருவானதாகவும் செய்தி உண்டு. தஞ்சாவூர், திருக்காட்டுப்பள்ளி, இளங்காட்டில் இராஜராஜ சோழனால் கட்டப்பெற்ற செங்கல்லால் ஆன சிறிய கோயில்தான் முன் மாதிரியாகும்.

இக்கோயிலின் தலைமைச் சிற்பி குஞ்சர மல்லன் ராஜராஜப்பெருந்தச்சன் எனக் கோயிலின் கல்வெட்டுகளில் குறிப்பிடப்பட்டுள்ளது. கோயிலின் அடிப்பாகம் 5 மீட்டர் (16 அடி) உயரம் கொண்டுள்ளது. ஒரே கல்லில் அமைக்கப்பட்டுள்ள நந்தி 20 டன் எடையும், இரண்டு மீட்டர் உயரம், ஆறு மீட்டர் நீளம், இரண்டரை மீட்டர் அகலமும் கொண்டதாகவும், லேபாக்ஷி கோயில் நந்திக்கு அடுத்தபடியாக, இந்தியாவிலேயே இரண்டாவது பெரிய நந்தியுமாகவும் உள்ளது. முதன்மைக் கடவுளான இலிங்கம் 3.7 மீட்டர் உயரமானது. வெளிப் பிரகாரம் 240 மீ. x 125 மீ. அளவிலானது.108 பரத நாட்டிய முத்திரைகளைக் காட்டும் நடனச் சிற்பங்கள் வெளிச்சுவற்றின் மேற்பகுதியில் வடிக்கப்பட்டுள்ளன.

முக்கியமான கட்டடம் 150 அடி நீளம் இருக்கிறது. மிகப் பிரம்மாண்டமான விமானம் எகிப்தியப் பிரமிடுகளைப் போல கூர்நுனிக் கோபுரமாக அமைந்து கர்ப்பக்கிரகத்திலிருந்து 190 அடி உயரத்திற்கு ஓங்கி வளர்ந்திருக்கிறது. அக்காலத்தில் புவனேஸ்வரத்தில் கட்டப்பட்ட லிங்கராஜர் கோயிலின் உயரம் 160 அடியாகும். இராஜராஜேஸ்வரம் அதையும் மிஞ்சி விட்டமை குறிப்பிடத்தக்கது. இந்தக் கோயிலில் பிற்காலத்தில் கட்டப்பட்டவை - முன் தாழ்வாரம், நந்தி மண்டபம், கருவூர்த் தேவர் கோயில், அம்மன் கோயில், சுப்பிரமணியர் கோயில் ஆகியன.


இக்கோவிலில் தமிழின் சிறப்புக்களும் மாமன்னர் இராஜ ராஜ சோழனின் தமிழ் பற்றும் கோயிலில் உள்ள சிவ லிங்கத்தின் உயரம் 12 அடி தமிழின் உயிர் எழுத்துக்கள் 12, சிவ லிங்கத்தின் பீடத்தின் உயரம் 18 அடி தமிழின் மெய் எழுத்துக்கள் 18, கோயிலின் கோபுரத்தின் உயரம் 216 அடி தமிழின் உயிர் மெய் எழுத்துக்கள் 216, சிவ லிங்கத்திற்கும் நந்திக்கும் உள்ள இடைவெளி 247 அடி தமிழின் மொழியின் மொத்த எழுத்துக்கள் 247 ஆகும்

ஆயிரம் ரூபாய் நோட்டு, தபால் தலை


தஞ்சைக் கோயிலின் தோற்றம் பதிக்கப்பட்ட ரூபாய் நோட்டு

தஞ்சை பெரிய கோவிலுக்கு பெருமை சேர்க்கும் வகையில் மத்திய அரசு சார்பாக கடந்த 1954ம் ஆண்டு ஏப்ரல் 1 ஆம் தேதி ₹ 1000 நோட்டை வெளியிட்டது. அதில் தஞ்சை பெரிய கோவில் எனப்படும் பிரகதீசுவரர் ஆலயத்தின் வியத்தகு தோற்றம் பதிக்கப்பட்டது. ரிசர்வ் வங்கியின் 4வது கவர்னரான சர் பெனகல் ராமாராவ், அதில் கையெழுத்திட்டார்.

தஞ்சை பெரிய கோவிலின் ஆயிரம் ஆண்டு நிறைவு விழாவினை தஞ்சை மாநகரில் 2010 செப்டம்பர் 25, செப்டம்பர் 26-ந் தேதி ஆகிய 2 நாட்களுக்கு சிறப்புற நடத்தப்பட்டது.

Sunday, June 6, 2021

Day - 7 Human body facts

 



மனித உடல் எப்படி உருவாக்கப்பட்டிருக்கிறது தெரியுமா?


நம் உடலில் 37.2 டிரில்லியன் செல்களும், அவைகளில் 200 விதமான வகைகளும் இருக்கின்றன.


நம் தோலில் 100 பில்லியன் தோல் செல்கள் உள்ளன.


நம் மூளையில் 100 பில்லியன் நியூரான்கள் உள்ளன. நாம் மூளையில் தினமும் 60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிந்தனைகள் செய்கிறோம்.


நமது மூளை 1 குவாட்ரில்லியன் (1 மில்லியன் பில்லியன்) பிட் (Bit) அளவு தகவலைத் தாங்கக் கூடியது.


நம் உடலில் 60 மில்லியன் ‘உணர்வு ஏற்பிகள்’ (receptors) உள்ளன.

நாம் 6 விநாடிக்கு ஒரு முறை கண்களை  இமைக்கிறோம்.  சாதாரணமாக வாழ்நாளில் சுமார் 25 கோடி. முறைகள் கண்களை இமைக்கிறோம்...


கண்களைப் பொறுத்தவரை 127 மில்லியன் விழித்திரை செல்கள் உள்ளன. இதன் பயனாகத்தான் நம்மால் 10 மில்லியன் வெவ்வேறு நிறவேறுபாட்டைக் காண இயலுகிறது.


நம் கண்களில் 120 மில்லியன் ‘கம்பி செல்’கள் (rod cells) மற்றும் 6 மில்லியன் ‘கூம்பு செல்’கள் (cone cells) உள்ளன.


நமது கண் மட்டும் ஒரு டிஜிட்டல் கேமராவாக இருந்தால் அதன் ஒளியியல் தீர்மானம் (digital resolution) 576 மெகா பிக்சல் கொண்டதாயிருக்கும்.


மூக்கில் 1000 நுகர்வு ஏற்பிகள் உள்ளன. இதன் மூலம் நம்மால் 50 ஆயிரம் வெவ்வேறு வாசனைகளை வேறுபடுத்தி உணர முடியும்.


நம் உடலில் 6 லிட்டர் ரத்தம் ஓடுகிறது. 42 டிரில்லியன் சிவப்பு ரத்த அணுக்கள் உள்ளன. இவை சுமார் 42 பில்லியன் ரத்த நாளங்களில் பயணிக்கின்றன.


நாம் தினசரி 23,040 முறை மூச்சு விடுகிறோம். இதயம் தினசரி 1,15,200 முறை துடிக்கிறது.


நம் உடலில் 640 தசைநார்களும், அதன் பயனாய் 360 தசைகூட்டுகள் (joints) உள்ளன.


ஒவ்வொரு நாளும் நம் இதயம் தரும் சக்தியின் அளவால் நம்மால் ஒரு சாதாரண டிரக்கை 32 கி.மீ. தூரம் வரை இழுத்துச் செல்ல முடியும்.


சராசரி மனிதனின் வாழ்நாளில் நமது இதயம் ரத்தத்தை உடலில் பாய்ச்சும் அளவு 1.5 மில்லியன் பீப்பாய் அளவுக்கு சமம்.


நமது இதயம் உடலிலிருந்து வெளியே எடுக்கப்பட்டாலும் தன் துடிப்பை உடனே நிறுத்தாது. ஏனெனில் இதயத்தில் உள்ள மின்சார உந்துவிசை சிறிது நேரம் செயல்பட்டுக் கொண்டே இருக்கும்.


நம் தலையில் சுமார் ஒரு லட்சம் மயிர்க்கால்கள் உள்ளன. தினசரி சுமார் 100 மயிரிழைகள் உதிர்கின்றன.


சாதாரணமாய் மனித உடலில் தினசரி சுமார் 800 மி.லிட்டர் வியர்வை சுரக்கிறது.


ஒரு வளர்ந்த மனித உடலில் 206 எலும்புகள் உள்ளன. குழந்தைகளுக்கு ஆரம்பத்தில் 300 எலும்புகள் இருக்கும். நாளாவட்டத்தில் குழந்தை வளரும்போது சில எலும்புகள் ஒன்றோடொன்று இணைந்து விடும்.


சாதாரணமாக ஒரு மனிதன் தன் வாழ்நாளில் இரண்டு நீச்சல் குளங்களை நிரப்பும் அளவுக்கு சுமார் 23 ஆயிரம் லிட்டர் உமிழ்நீர் சுரக்கிறான்.


நம் உடலில் இரும்பு சத்து இருப்பதை அறிவோம். இந்த இரும்பு சுமார் 7.5 செ.மீ. நீளமுள்ள சாதாரண அளவு ஆணியை உருவாக்கும் அளவுக்கு உள்ளது.


நம் உடலின் எல்லா செல்களில் உள்ள டி.என்.ஏ. (DNA) வைப் பிரித்து நீட்டி இழுத்தால், அதன் நீளம் 10 பில்லியன் மைல்கள் இருக்கும். இது நாம் பூமியிலிருந்து புளூட்டோ கிரகம் சென்று திரும்பி வரும் அளவுக்கு சமம்.


நமது விரல்கள் 13 நானோ மீட்டர் அளவு குறைந்த பொருளையும் உணரும் தன்மை பெற்றவை.


நம் நாக்கில் உள்ள உணர்வு மொட்டுகள் 10 நாட்களுக்கு ஒரு முறை மாற்றம் பெற்றுக்கொண்டே இருக்கும்.


நம் வயிற்றில் சுரக்கும் அமிலம் நம் தோலின் மீது பட்டால் ஒரு துளையே உருவாகும் அளவுக்கு காரத்தன்மை நிறைந்தது.


மூளையில் ஏற்படும் வலியை  நம்மால் உணரமுடியாது. ஆனால் மற்ற உறுப்புகளின் வலியை உணர்த்துவது மூளையே...

உடலில் ரத்தம் பாயாத

பகுதி கருவிழி மட்டுமே...

மனித உடலையும், அதில் உள்ள உறுப்பு களின் செயல்களையும் எண்ணிப்பார்க்கையில் ஒரு விந்தையே. இவ்வளவு அதிசயங்கள் நிறைந்த இந்த உடல் இறைவனால் நமக்கு அளிக்கப்பட்ட பரிசே. அதை நலத்துடன் பாதுகாப்போம்.

Saturday, June 5, 2021

திமிங்கிலம் - Day #6 - #QuizProgrammeTopic


திமிங்கிலம்


                    திமிங்கிலம் (திமிங்கலம், Whale) நீரில் வாழும் பாலூட்டி இனத்தைச் சேர்ந்த ஒரு விலங்கு ஆகும். இதன் ஒரு வகையான நீலத் திமிங்கிலமே உலகின் மிகப்பெரிய பாலூட்டி என்று கருதப்படுகிறது.
உலகிலுள்ள உயிரினங்களுள் மிகப்பெரியதாக வளரக்கூடிய இனம் நீலத் திமிங்கிலம் ஆகும். இது சற்றேறக்குறைய 100 அடி நீளமும் 150 டன் எடையுள்ளதாகவும் வளரக்கூடியது. நீலத் திமிங்கிலத்தின் நாக்கில் 50 பேர் உட்காரக்கூடிய அளவு இடமிருக்கும். இத்தகைய திமிங்கிலத்திடம் மூர்க்கமான குணங்கள் கிடையாது. இவை மிகவும் சாதுவானவை ஆகும்.

உடலைமைப்பு:-

                    திமிங்கிலங்கள் நீரில் நீந்துவதற்கு ஏதுவாக தம் உடலமைப்பை இருபுறமும் கூர்மையாக மீன் போல தகவமைத்துக் கொண்டுள்ளன. உடலில் கொஞ்சம் மயிரினைக் கொண்டுள்ளன. இவற்றின் தோலின் உட்புறம் ஒரு கொழுப்பு அடுக்கினைக் கொண்டுள்ளன. இது திமிங்கிலங்களுக்கு உடல் வெப்பத்தைத் தக்க வைக்க உதவுகிறது. இவற்றுக்கும் மனிதனைப் போன்றே இதயத்தில் நான்கு அறைகள் உள்ளன.
                                            
                                                    
    

சுவாச அமைப்பு:-

                        திமிங்கிலங்கள் நீரில் வசிப்பினும் அவை மற்ற மீனினங்களை போல செவுள்களால் சுவாசிப்பதில்லை
இவை நுரையீரல் மூலமே மூச்சுவிடுகின்றன.அவை நம்மைபோல் நுரையீரலைக் கொண்டிருப்பதால் எப்பொழுதெல்லாம் சுவாசிக்க வேண்டுமோ அப்பொழுதெல்லாம் நீரின் மேற்பரப்புக்கு வந்து காற்றை அதன் மூக்கு வழியாக உள்ளிழுத்துச் செல்லும். திமிங்கிலங்களின் நுரையீரல் மிகவும் பெரியதாகும்.
                    திமிங்கிலங்களின் தலைப்பகுதியில் குழாய் போன்ற மேல் நோக்கிய துளை ஒன்று உள்ளது. இவை இத்துளைகளின் வழியாகவே சுவாசிக்கின்றன. இத்துளை பலீன் வகை திமிங்கிலங்களுக்கு இரண்டும் பற்திமிங்கிலங்களுக்கு ஒன்றும் உள்ளது. திமிங்கிலங்கள் தனித்தன்மை வாய்ந்த சுவாச மண்டத்தைக் கொண்டுள்ளதால் இவற்றால் மூச்சுவிடாமல் நீண்ட நேரம் நீருக்கடியில் இருக்கவியலும். இசுப்பெர்ம் திமிங்கலம் எனப்படும் ஒரு வகைத் திமிங்கிலத்தால் இரண்டு மணிநேரம் நீருக்குள் மூச்சடக்கி இருக்க முடியும்.
                                    
          
        
இரை தேடல்:-
                    இவற்றின் உடல் அளவிடற்கரிய கடல் நீரின் அழுத்தத்தைத் தாங்கக் கூடிய வகையில் அமைந்துள்ளது. இவை தங்கள் இரையைத் தேடி கடலின் நீண்ட ஆழத்திற்கும் கூட செல்கின்றன. 1000 மீட்டர் முதல் 2000 மீட்டர் (இரண்டு கிலோ மீட்டர்) ஆழம் வரை செல்லக் கூடிய ஆற்றல் பெற்றது.
                ஆழக் கடலின் வெளிச்சம் அறவே இல்லாத அடர்ந்த இருளில் இரையைப் பிடிக்க பயன்படுத்தும் எதிரொலி உத்தி (echo location) மூலம் இரையின் இருப்பிடத்தை திமிங்கிலங்கள் துல்லியமாக அறிந்து கொள்கின்றன.இவ்வாறு ஒருமுறை காற்றை நுரையீரலில் நிரப்பிக்கொண்டு திமிங்கிலங்கள் 7,000 அடி வரை நீரின் ஆழத்திற்கு சென்று இரை தேடும் வல்லமை பெற்றவை.

திமிங்கில எண்ணெய் :-
            
                    திமிங்கில எண்ணெய் (whale oil) என்பது திமிங்கில கொழுப்புக்களில் பெறப்படும் எண்ணெய் ஆகும்.[1] [எண்ணெய்த் திமிங்கிலம்|எண்ணெய்த் திமிங்கிலத்தின்]] தலைக்குழிவுகளில் இருந்து இசுப்பேர்ம் எண்ணெய் எனப்படும் சிறப்பு வகை எண்ணெய் பெறப்படுகின்றது. திமிங்கில எண்ணெயிற்கு பதிலாக மாற்றுகள் பயன்படுத்தப்பட்டதாலும், சுற்று சூழல் சட்டங்களினாலும் 19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் திமிங்கில எண்ணெயின் பயன்பாடு சரிவடைந்தது. 1986 ஆம் ஆண்டில் சர்வதேச திமிங்கில ஆணையம் திமிங்கில வேட்டைக்கான தடையை அறிவித்தது. இன்று வரை திமிங்கில எண்ணெய் பயன்படுத்துவதையும் தடை செய்துள்ளது. திமிங்கில எண்ணெய் விளக்கு எரிக்கும் எண்ணெயாக பயன்பட்டது . 19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் இதற்கு மாற்றாக மண்ணெண்ணெய் பயன்படுத்தப்பட்டது.
                திமிங்கில எண்ணெய் முதலாம் உலகப் போரின் போது குளிரினாலும், சுகாதாரமற்ற நிலையினாலும் ஏற்படும்  டிரன்ச் புட் (trench foot) என்ற மருத்துவ நிலையிற்கு எதிரான தடுப்பு நடவடிக்கைக்காக காலாட்படையினரின் வெற்றுப் பாதங்களில் தேய்க்கப்பட்டது.
        
                                                

        
            
திமிங்கிலத்தின் வகைகள்:-
திமிங்கிலங்களில் 75 வகைகள் உள்ளன.




வெள்ளைத் திமிங்கலம் என்பது வட துருவப் பகுதிக் கடலில் மட்டும் வாழும் ஒரு வகை திமிங்கிலம் ஆகும். கடற்பாலூட்டி குடும்பத்தில் இந்த இனம் மட்டுமே வெள்ளை நிறத் தோற்றம் கொண்ட இனமாகும். இந்தச் சிறிய வகை திமிங்கிலம் 5 மீட்டர் நீளம் வரை வளரக்கூடியது. பெண்பால் வகையை விட ஆண்வகைகள் பெரிதாக வளரும். ஆண் வெள்ளைத் திமிங்கிலங்கள் 1,360 கிலோகிராம் வரையும் பெண் 900 கிலோகிராம் வரையும் எடை கொண்டவை. பொதுவாக, பிறக்கும்போது 1.5 மீட்டர் நீளமும் 80 கிலோ எடையும் கொண்டு சாம்பல் நிறத்தில் இருக்கும்.

குறுந்துடுப்பு பைலட் திமிங்கிலம் என்பது கடல் வாழ் பேரின வகையைச் சார்ந்த உயிரினம் ஆகும். இவற்றில் பற்கள் உள்ளவை, பற்கள் அற்றவை என இரண்டு வகை உள்ளது. [2] கடலின் நடுவில் வாழும் உயிரினமான இது திமிங்கில வகையைச் சார்ந்ததுதான். இதன் உடம்பில் காணப்படும் துடுப்பைக் கொண்டு வேறுபடுத்தப்படுகிறது.

நீலத் திமிங்கலம் (Blue whale) என்பது கடற்பாலூட்டி வரிசையைச் சேர்ந்த உயிரினம் ஆகும். அளவு மற்றும் எடையின் படி இதுவே உலகிலுள்ள மிகப்பெரிய விலங்கு ஆகும். இது சராசரியாக 80 முதல் 100 அடி வரை நீளம் கொண்டது. இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட நீலத்திமிங்கலத்தின் அதிகபட்ச எடை 173 டன். நீலத் திமிங்கிலம் ஒரு நாளைக்கு ஏறக்குறைய 3,600 கிலோ உணவை உட்கொள்கிறது.
            உலகின் எல்லாக் கடல்களிலும் இவை வசிக்கும். தனியாகவோ, சின்னக் கூட்டமாகவோ வலம் வரும். சராசரியாக 80 முதல் 90 வருடங்கள் வாழும். 25 முதல் 32 மீட்டர் நீளம் இருக்கும். இவற்றின் தோல், நீலம் கலந்த சாம்பல் நிறமாக இருக்கும்.
ஒரு தடவை ஒரு குட்டி மட்டுமே ஈனும். பிறக்கும் போதே, அந்தக் குட்டி இரண்டு டன் எடை இருக்கும். வருடா வருடம் 91 கிலோ எடை கூடிக்கொண்டே இருக்கும். க்ரில்’ என்ற கடல்வாழ் உயிரினங்களை இவை விரும்பிச் சாப்பிடும்.

அழிந்து வரும் திமிங்கலம்:-
• கடந்த காலங்களில் அதாவது 1700 மற்றும் 1800 களில்
திமிங்கிலங்கள் அவற்றின் கொழுப்பு
எண்ணெய்க்காக மூர்க்கத்தனமாக வேட்டையாடப்பட்டு கொன்று குவிக்கப்பட்டன. அந்தக் காலகட்டங்களில் திமிங்கில எண்ணெய்தான் விளக்கெரிக்கப் பயன்படுத்தப்பட்டது.
  • 1940ம் ஆண்டுவாக்கில் பல்வேறு வகையான திமிங்கிலங்களின் எண்ணிக்கை அருகி வருவது கண்டறியப்பட்டு, திமிங்கில வேட்டையை முறைப்படுத்த 1946ம் ஆண்டு 'சர்வதேச திமிங்கிலப்'பிடிப்பு அமைப்பு' ஏற்படுத்தப்பட்டது. நோர்வே, கிறீன்லாந்து, ஜப்பான் ஆகிய திமிங்கிலங்கள் வேட்டையாடும் நாடுகள், இந்த அமைப்பில் முக்கிய உறுப்பு நாடுகளாகும்.
  • 'சர்வதேச திமிங்கில பிடிப்பு அமைப்பு' 1986 ஆண்டு சில வகைத் திமிங்கலங்களை பிடிக்க தடை போட்டது.


Friday, June 4, 2021

Day 5 - Quiz Content Topic - Auroville

                                        


                                        ஆரோவில் (Auroville) என்பது ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனம்(யுனெஸ்கோ) உதவியுடன் அமைக்கப்பட்டுள்ள சர்வதேச நகரமாகும். புதுச்சேரிக்கு அருகில் 12 கி.மீ தொலைவில்அமைந்துள்ளது. இது தற்போது மத்திய அரசின் மேற்பார்வையில் உள்ளது. ஆரோவில் ஒரு சர்வதேச கூட்டுச்சமூக நகரமைப்பு.

            எல்லா நாடுகளையும் சேர்ந்த ஆண்களும், பெண்களும் மதக் கோட்பாடுகளையெல்லாம் அரசியல் ஈடுபாடுகளையெல்லாம் நாட்டுப்பற்றுகளையெல்லாம் தாண்டி அமைதி, மேலும் மேலும் சிறந்து வளரும் சமூகம் முதலியவற்றின் அடிப்படையில் வாழக்கூடிய ஒரு சர்வதேச நகரமாக இருக்க ஆரோவில் விரும்புகிறது. மனித குல ஒருமைப்பாட்டை உண்மையாக்குவதே ஆரோவில்லின் நோக்கமாகும்’ என்ற பிரகடனத்தோடு ஸ்ரீ அன்னையால் தோற்றுவிக்கப்பட்டது. 

                                    


 கட்டுமானம்:- 

                                       



1968-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 28ஆம் நாள் ஆரோவில் நகரத்தைக் கட்டும் புனிதப் பணிக்கு அடிக்கல் நாட்டப்பட்டது. அதன் மையத்திலிருந்த பெரிய ஆலமரத்திலிருந்து சிறிது தொலைவில் ஒரு வட்ட வடிவமான மேடையில் தாமரை மொட்டு வடிவத்தில் சலவைக்கல்லாலான ஒரு தாழியில் உலகத்தின் 121 நாடுகளிலிருந்தும் இந்தியாவில் 25 மாநிலங்களிலிருந்தும் அந்தந்த இடத்திலிருந்து ஒரு பிடி மண் கொணரப்பெற்று அங்கு இடப்பெற்றது. இந்த உலக நகரில் சுமார் 50,000 பேர் வசிப்பதற்காகத் திட்டமிடப்பட்டு உருவாக்கம் பெற்று வருகிறது. நகரத்தின் மையத்தில் ஆரோவில்லின் ஆன்மாவாகிய மாத்ரி மந்திர் அமைந்துள்ளது. அதனைச்சுற்றி பூந்தோட்டங்கள் உள்ளன. இந்த மையப்பகுதிக்கு பேரமைதி (Peace) என்று பெயர். 

 சிறப்பம்சங்கள்:-

                        


         ஆரோவில் சமூகத்தில் 35க்கும் மேற்பட்ட நாடுகளை சேர்ந்த மக்கள் வசிக்கின்றார்கள். பன்னாட்டு மக்களிடையே நல்லிணக்கமாகவும் கலை, இலக்கிய, பண்பாட்டு நெறிமுறைகளைப் பகிர்ந்து கொள்ளவும் ஆன்மிகத்தின் அடிப்படையில் ஓருலகக் கருத்துணர்வை வளர்க்கும் வகையிலும் வளர்ந்து வரும் இந்நகரில் நான்கு மொழிக்கொள்கை நடைமுறையில் உள்ளது. முதல்மொழி தமிழ். அடுத்து பிரெஞ்ச், சமஸ்கிருதம், மற்றும் ஆங்கிலம் இங்கு பேச்சு மற்றும் எழுத்து மொழிகளாக விளங்குகின்றன. ‘ஆரோவில் டுடே’ என்னும் இதழ் (1988 ஆம் ஆண்டிலிருந்து) ஆங்கில மொழியில் வெளிவந்து கொண்டிருக்கிறது. வலைத்தளத்தின் மூலமாக ‘ஆரோவில் ரேடியோ’ இயக்கப்படுகிறது. முற்றிலும் வறண்ட பூமியான இதனைச் செழிப்பு மிகுந்த ஆன்மிக நகரமாக உருவாக்குவதற்கு 40 நாட்டு மக்கள் உள்ளூர் மக்களின் துணையோடு உழைத்து வந்திருக்கிறார்கள். மழைநீர் சேகரிப்பு, இயற்கை வேளாண்மை, மாற்றுச்சக்தி மற்றும் மறுஉற்பத்தி செய்ய வல்ல (சூரிய சக்திப் பலகங்கள்வழி) பொருள்களைக் குறைந்த விலையில் உற்பத்தி செய்து வழங்குதல், விதைகள் சேகரிப்பு, மர நாற்றுப் பண்ணைகள், ஆராய்ச்சிப் பணிகள் எனப் பலவற்றைச் செய்து வரும் ஆரோவில்லின் நோக்கம் மானுடம் மேம்படைதல் என்பதேயாகும். 8 மொழிகளில் 25,000 மேற்பட்ட நூல்கள் மற்றும் குறுந்தகடுகளைக் கொண்ட நூலகங்கள் இங்கு உள்ளன. இந்திய மற்றும் பிறநாட்டு மொழிகளைக் கற்பதற்கான மொழிக்கூடம் இங்கு உள்ளது. பாரத்நிவாஸ் வளாகத்தில் ஆரோவில் ஆவணப்பாதுகாப்பு மையமும் செயல்படுகின்றது. 40க்கு மேற்பட்ட விருந்தினர் இல்லங்கள், மாணவர், இளைஞர் விடுதிகள் இங்கு அமைந்துள்ளன. ஆய்விற்காகவும், ஆன்ம பரிசோதனைகளுக்காகவும் இங்கு ஆண்டுதோறும் ஆரோவில் சபைகளைச் சார்ந்த பன்னாட்டினர் வந்து தங்குகின்றனர். ஆயிரம்பேர் அமர்ந்துண்ணும் வகையில் இங்கு இயங்கும் சூரியசக்தி உணவகம் (சோலார் கிச்சன்) குறிப்பிடத்தக்க ஒன்றாகும். ஆரோவில் குழந்தைகளுக்கான 5 பள்ளிகள், 2 சிறார் பள்ளிகள், 2 முன் மழலையர் பள்ளிகள் இவற்றோடு ஆரோவில் பகுதியைச் சுற்றிலும் 16 பள்ளிகள் அமைக்கப்பட்டுள்ளன. கிராம இளைஞர்கள் தொழிற்கல்வி கற்றுக் கொள்வதற்கென ஒரு தொழிற்பள்ளியும், பணிமுடித்துத் திரும்பும் தொழிலாளர்களுக்கான இளைஞர்கள் கல்வி மையமும் இயங்கும். 

 உலக அரங்கில் ஆரோவில்:- 

     1968-இல் நடைபெற்ற ஆரோவில் தொடக்கவிழாவில் 124 நாடுகள் பங்கேற்று ஆரோவில் சாசனத்தை ஏற்றுக் கொண்டன. 1988-இல் இந்திய அரசு ஆரோவில் பவுண்டேஷன் சட்டத்தை நிறைவேற்றி, நிர்வாகப் பேரவை, பன்னாட்டு ஆலோசனைக் குழு, ஆரோவில்வாசிகள் அவை ஆகியவற்றை அமைத்தது. ஆரோவில் நகரத் திட்டத்திற்கு அங்கீகாரம் அளித்ததோடு நிதியுதவியும் வழங்கி வருகிறது.யுனெஸ்கோ, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் உலகின் முக்கியத் தொண்டு நிறுவனங்கள் போன்றவற்றின் நல்லுறவையும் அங்கீகாரத்தையும் ஆரோவில் பெற்றுள்ளது. 6 கண்டங்களில் உள்ள உலக அமைதிச் சின்னங்களின் வரிசையில் ஆசியாவிற்கான அமைதி மேசை ஆரோவில்லிற்கு வழங்கப்பட்டுள்ளது. இம்மேசையை ஐ.நா. சபை நட்புக்குழு சார்பில் நியூயார்க் நகரில் வழங்கப் பெற்றபோது ஆரோவில்லின் பிரதிநிதியாக தமிழ்க்கவிஞர் இரா.மீனாட்சி அதனைப் பெற்றுக்கொண்டார். 

 மாத்ரி மந்திரின் அமைப்பு :-

        மாகாலட்சுமி, மகாசரஸ்வதி, மகாகாளி, மகேஸ்வரி ஆகிய பிரபஞ்ச அன்னையின் செயல் வடிவங்களை ஸ்ரீஅரவிந்தர் உணர்த்தும் வகையில் இம்மண்டபத்தை முறையே கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு ஆகிய திசைகளில் நான்கு தூண்கள் தாங்கி நிற்கின்றன. மாத்ரி மந்திர் சிறிது தட்டையான கோளவடிவிலான ஆலயமாகும். தரைமட்டத்திலிருந்து 29 மீ. உயரத்தில் உள்ள இக்கோளத்தின் விட்டம் 36 மீ. முக்கோண வடிவச் சட்டங்களால் ஆன இக்கோளத்தின் புறப்பகுதி, தங்க ரேக்குகள் பதிக்கப்பெற்ற வட்ட வடிவத் தட்டுகளால் அமைக்கப் பெற்றுக் காண்போரைக் கவர்கின்றது. கோளத்தின் உட்புற மேற்பகுதியில் ஒரு பெருங்கூடம் உள்ளது. அதன் விக்கிரகங்களோ, படங்களோ கிடையாது. பன்னிரு பக்கங்களைக் கொண்ட அந்த அறையின் தளப்பகுதியும் சுவர்களும், வெண் சலவைக் கற்களால் ஆனவை. பன்னிரு தூண்களைக் கொண்ட அந்த அறையில் சன்னல்கள் இல்லை. நுழையவும், வெளியேறவும் கூடிய வகையில் இரு வாசல்கள் உண்டு. அறையின் மையத்தில் ஸ்ரீஅன்னையின் சின்னமும், அதன் நடுவில் நான்கு புறமும் ஸ்ரீஅரவிந்தரின் சின்னங்கள் பொருத்தப் பெற்ற பொன்முலாம் பூசிய மேடையின்மீது உருண்டை வடிவிலான ஒளி ஊடுருவக்கூடிய படிகம் ஒன்று அமைக்கப் பெற்றுள்ளது. அதன் நேர் மேற்கூரையிலுள்ள ஆடியின் வழியாகச் சூரிய ஒளிக்கீற்றுகள் உள் புகுந்து படிகத்துள் பிரதிபலிக்கும் அழகு நேரில் தரிசித்து அனுபவிக்கத்தக்கது. சூரிய ஆற்றலை மின்கலங்களில் சேகரித்து வைத்துச் சூரிய ஒளி இல்லாத பொழுதுகளில் அப்படிகத்தின் மீது செலுத்தப் பெறும். இப்படிகம் உலகிலேயே மிகப்பெரிய செயற்கைப் படிகமாகும்.

                                        


Thursday, June 3, 2021

DAY - 4 அதிசயங்கள் அடங்கிய அமேசான்

 

அமேசான் ஆறு


தென் அமெரிக்க கண்டத்திலுள்ள ஒரு ஆறாகும். இது உலகின் இரண்டு நீளமான ஆறுகளில் ஒன்று. மற்றொன்று நைல் ஆறு. அமேசான் ஆறு கொணரும் நீரின் அளவில் உலகின் பெரிய ஆறாகும்.   மற்றும் சில ஆசிரியர்களின் கூற்றின்படி, உலகின் நீண்ட ஆறாகும். இதன் அளவு மிசிசிப்பி, நைல், மற்றும் யாங்சே ஆகிய நதிகளின் மொத்த அளவை விட அதிகம். இதன் நீளம் 6400 கி.மீ.கள். உலகிலேயே பரப்பளவில் பெரிய ஆற்றுப் படுக்கையை கொண்ட ஆறாகும்.
அமேசான் ஆற்று டால்பின்  அமேசான் மற்றும் ஒரினோகோ ஆற்றுப் பகுதியில் வசிக்கிறது. இதுவே ஆற்று டால்பின் வகைகளில் மிகப்பெரியதாகும்.

இங்கு அதிகளவில் பிரன்கா என்ற மீன் வகை காணப்படுகிறது. இவை கூட்டமாக வாழும். இவை மாடு, மான் போன்ற உயிரினங்களை தாக்ககூடியவை. மனிதர்களும் தாக்கப்பட்டுள்ளார்கள். எனினும் சில வகை பிரன்காக்களை மனிதர்களை தாக்குகின்றன. குறிப்பாக சிவப்பு வயிற்று பிரான்கா மனிதரை தாக்கும் வகையாகும்.

அனகோண்டா வகை பாம்புகள் அமேசான் படுகையின் கரையில் காணப்படுகிறது. இது பெரிய பாம்பினங்களில் ஒன்றாகும். இவை பெரும்பாலும் நீரிலேயே வாழ்கின்றன. இதன் மூக்கு பகுதி மட்டும் நீர் மட்டத்துக்கு வெளியே இருக்கும்.

அமேசான்மழைக்காடு


         அமேசான்மழைக்காடு என்பது  தென்அமெரிக்காவின் அமேசான்  ஆற்றுப் படுகையில் அமைந்துள்ள ஒரு பெரிய மழைக்காடு ஆகும். அமேசானியா அல்லது அமேசான் படுகை என்றழைக்கப்படும் இதன் பரப்பளவு ஏழு மில்லியன் சதுர கிலோமீட்டர்கள் ஆகும். இதில் காடு மட்டும் 5.5 மில்லியன் ச.கி.மீ ஆகும். மேலும் இது ஒன்பது நாடுகளில் பரவியுள்ளது. அந்நாடுகள் பிரேசில் (ஏறத்தாழ 60 சதவீத மழைக்காட்டினை உள்ளடக்கியது), கொலம்பியா, பெரு, வெனிசுலா, ஈக்வெடார், கயானா, பொலிவியா, சுரிநாம், பிரெஞ்சு கயானா ஆகியனவாகும். இவற்றில் நான்கு நாடுகளில் உள்ள அமேசானாஸ் என்ற மாநிலங்கள் இக்காட்டின் காரணமாகவே ஏற்பட்டது.
உலகில் அறியப்பட்ட பத்தில் ஒரு உயிரினம் அமேசான் மழைக்காடுகளில் உள்ளது. 

உலகின் பாதியளவு மழைக்காடுகள் கொண்ட அமேசான் மழைக்காடுகளின் பரப்பளவு 1.4 பில்லியன் ஏக்கர்கள் ஆகும்.

அமேசான் மழைக்காட்டில் 4,100 மைல் நீளம் கொண்ட அமேசான் ஆறு பாய்கிறது.
இதுவே உலகின் மிகப்பெரிய உயிரினத் தொகுப்பாகும். இப்பகுதி 2.5 மில்லியன் பூச்சியினங்களுக்கும்    10,000-க்கும் அதிகமான தாவரவகைகளுக்கும், ஏறத்தாழ 2000 பறவை, பாலூட்டி இனங்களுக்குத் தாயகமாக விளங்குகிறது. உலகில் உள்ள அனைத்துப் பறவைகளில் ஐந்தில் ஒன்று இம்மழைக்காடுகளில் வசிக்கிறது.

Wednesday, June 2, 2021

Day 3 - Quiz Programme Content - விண்ணைத்தொடும் இமயமலை !

 விண்ணைத்தொடும் இமயமலை !



இமயமலை என்பது இந்தியத் துணைக்கண்டத்தின் சமவெளியையும் திபெத்திய மேட்டு நிலத்தையும் பிரிக்கும் ஒரு மலைத்தொடர் ஆன இது ஆசியாவில் அமைந்துள்ளது.


உயர்ந்த இடம் Peak எவரெசுட்டு சிகரம் (நேபாளம், இந்தியா மற்றும் சீனா)உயரம்8,848 m (29,029 ft)


இந்திய துணைக்கண்டத்தின் வட எல்லையாக அமைந்துள்ளது. இது மேற்கே காஷ்மீர்-சிங்காங் பகுதி முதல் கிழக்கே திபெத்-அருணாசல பிரதேசம் பகுதி வரை நீண்டு இருக்கிறது. இமயமலைத்தொடரில் நூற்றுக்கு மேற்பட்ட சிகரங்கள் உள்ளன. இதில் சிலவற்றின் உயரம் 7200 மீட்டருக்கு மேலாகும்.


மூன்று இணையான உப தொடர்களைக் கொண்டுள்ள இது ஐந்து நாடுகளில் பரவியுள்ளது.பூடான், இந்தியா, நேபாளம், சீனா மற்றும் பாகிஸ்தான் என்பனவான அவற்றில் முதல் மூன்று நாடுகளில் அதிகமான மலைத்தொடர் பரவியுள்ளது.


உலகின் சில பெரிய நதிகளான சிந்து, கங்கை, மற்றும் பிரமபுத்திரா உற்பத்தியாகிறது. இந்நதிகளின் மொத்த வடிகால் 60 கோடி மக்களின் இருப்பிடமாகும். இமயமலை தெற்காசிய மக்களின் கலாச்சாரத்தை வடிவமைத்துள்ளது. இமயமலையில் உள்ள பல சிகரங்கள் இந்து மற்றும் புத்த மதங்களில் புனிதமாகக் கருதப்படுகிறது.


இமயமலை மேற்கு-வடமேற்கு பகுதியிலிருந்து கிழக்கு-வடகிழக்கு பகுதிவரை 2400 கிலோமீட்டர் வட்டவில்லாக அமைந்துள்ளது. இதன் மேற்கில் உயர்ந்த சிகரம் நங்கா பர்பத் சிந்து நதியின் வடக்கு வளைவில் அமைந்துள்ளது, இதன் கிழக்கில் உயர்ந்த சிகரம் நம்சா பர்வா பரம்ஹபுத்ராவின் பெரிய வளைவில் மேற்கே அமைந்துள்ளது. மலைத்தொடரின் அகலம் மேற்கில் 400 கிலோமீட்டரும் கிழக்கில் 150 கிலோமீட்டரும் ஆகும்.


இமயமலைப்பகுதி 15000 பனியாறுகளைக் கொண்டுள்ளது அதில் 12000 கன கிலோ மீட்டர் தண்ணீர் உள்ளது. அதன் பனிப்பாறைகள் கங்கோத்ரி மற்றும் யமுனோதிரி (உத்தரகண்ட்) மற்றும் க்ஹும்பு பனிப்பாறைகள் (எவரெஸ்ட் பகுதியில்), மற்றும் சேமு (சிக்கிம்) ஆகியவை அடங்கும். இமயமலை வெப்ப மண்டலத்திற்கு அருகே இருந்தாலும் அதன் உயர் பகுதிகுள் ஆண்டு முழுவதும் பனி நிறைந்து காணப்படுகிறது. இது பல வற்றாத ஆறுகளின் ஊற்றாகத் திகழ்கிறது.


இமயமலையில் உள்ள இந்துக்களின் புகழ்பெற்ற புனிதத் தலம் கயிலாயமலை . புகழ்பெற்ற சிகரம்! உயரம் 6638 மீ. இதன் அருகில் புகழ்பெற்ற மானசரோவர் நன்னீர் ஏரியும், உவர் நீர் கொண்ட இரட்சஸ்தல் ஏரியும் உள்ளன.


இரண்டு உயரமான சிகரங்களுக்கு இடையே உள்ள உயரம் குறைந்த இடம் கணவாய் எனப்படுகிறது. இமயமலைத் தொடரிலும் பல கணவாய்கள் உள்ளன. திபெத் எல்லையில் இமயமலையில் அமைந்துள்ள "மானா கணவாய் " உலகின் உயரமான கணவாயாகக் கருதப்படுகிறது. 

Tuesday, June 1, 2021

DAY -2 பனை மரம் - சிறப்புகள்

பனை (PalmyraPalm), புல்லினத்தைச் சேர்ந்த ஒரு தாவரப் பேரினம். அறிவியல் வகைப்பாட்டில் இதைப் போரசசு (borassus) என்னும் பேரினத்தில் அடக்குவர்.

★ பனைகள் பொதுவாகப் பயிரிடப்படுவதில்லை, இயற்கையிலே தானாகவே வளர்ந்து பெருகுகின்றன.
★ இளம் பனைகள் -வடலி  என்று அழைக்கப்படுகின்றன.
◆ பனை வளர்ந்து முதிர்ச்சியடைவதற்கு 15 ஆண்டுகள் வரை எடுக்கும் எனக் கூறப்படுகிறது. பனைகள் குறிப்பிடத்தக்க வளைவுகள் ஏதுமின்றிச் சுமார் 30 மீட்டர் உயரம் வரை வளரக்கூடியவை. கிளைகளும் கிடையா. இதன் உச்சியில், கிட்டத்தட்ட 30 – 40 வரையான விசிறி வடிவ ஓலைகள்  வட்டமாக அமைந்திருக்கும்.

★ பனை தமிழ் நாட்டின் மாநில மரமாகும்.
பலவகையான பயன்களை நெடுங்காலத்துக்குத் தருவதால் பனையை, கேட்டதைக் கொடுக்கும் தேவலோகத்து மரம் எனத் தொன்மங்கள் கூறும்  கற்பகதருவுக்கு  ஒப்பிடுவர்.
பத்து ஆண்டுகளுக்கு பிறகு தான்

★ ஆண், பெண் மரங்களை அடையாளம் காண முடியும்.
ஆண் பனையை ‘அழகுப்பனை’ என்றும், பெண் பனையை ‘பருவப்பனை’ என்றும் குறிப்பிடுவர்

◆ பனை மரத்தில் மொத்தம் 34 வகை இருக்கின்றன.
அவை
1. ஆண் பனை, 2. பெண் பனை, 3. கூந்தப்பனை, 4. தாளிப்பனை, 5. குமுதிப்பனை, 6.சாற்றுப்பனை, 7. ஈச்சம்பனை, 8. ஈழப்பனை, 9. சீமைப்பனை, 10. ஆதம்பனை, 11. திப்பிலிப்பனை, 12. உடலற்பனை, 13. கிச்சிலிப்பனை, 14. குடைப்பனை, 15. இளம்பனை 16. கூறைப்பனை, 17. இடுக்குப்பனை, 18. தாதம்பனை, 19. காந்தம்பனை, 20. பாக்குப்பனை, 21. ஈரம்பனை, 22. சீனப்பனை, 23. குண்டுப்பனை, 24. அலாம்பனை, 25. கொண்டைப்பனை, 26. ஏரிலைப்பனை, 27. ஏசறுப்பனை, 28. காட்டுப்பனை, 29. கதலிப்பனை, 30. வலியப்பனை, 31. வாதப்பனை, 32. அலகுப்பனை, 33. நிலப்பனை, 34. சனம்பனை
★ இது ஆப்பிரிக்காவைத் தாயகமாகக் கொண்டது எனக் கூறப்படுகிறது. ஆப்பிரிக்காவிலிருந்து மனித இனம் எங்கெங்கு இடம்பெயர்ந்ததோ அவ்விடங்களில் எல்லாம் ஆதி மனிதர்கள் பனை விதைகளை தங்களுடன் எடுத்துச் சென்றனர் எனச் சொல்லப்படுகிறது.
◆ கதர் மற்றும் சிற்றூர்த் தொழில் குழுமம் (Kadhi and Village Industry Commission) எடுத்த கணக்கெடுக்கின்படி 10.2 கோடி பனை மரங்கள் இந்தியாவில் உள்ளன.
★தமிழ் நாட்டில் மட்டும் 5 கோடி பனை மரங்கள் உள்ளன.[2] இவற்றுள் 50 விழுக்காடு மரங்கள் நெல்லை, தூத்துக்குடி, இராமநாதபுரம் மாவட்டங்களில் அடர்த்தியாக உள்ளன. சேலம்,நாமக்கல்,சென்னை, செங்கற்பட்டு, சிவகங்கை மாவட்டங்களில் அதிகமான அளவு நிறைந்துள்ளன. பிற மாவட்டங்களில் உள்ள மரங்களின் எண்ணிக்கை 30 லட்சத்திற்கும் குறைவாகவே உள்ளன.
◆ உலகிலேயே மிகவும் பெரிய பனைமர வகை தாளிப்பனை. வளர்ந்த ஒரு மரம் 25 மீ உயரமும் 1.3 மீ அகலமும் கொண்டது. இதன் இலைகள் 5 மீ விட்டமும் கிட்டத்தட்ட 130 சிறிய இலைகளையும் கொண்டிருக்கும்.

திருக்குறளில் பனை

★ திருக்குறளில் மொத்தமே இரண்டு மரங்கள் தான் இடம்பெற்றுள்ளன. ஒன்று மூங்கில் மற்றது பனை. அறத்துப்பாலில் செய் நன்றி அறிதல் அதிகாரத்தில் 104 வது குறளில், ‘தினைத் துணை நன்றி செயினும் பனைத்துணையாக் கொள்வர் பயன் தெரிவார்” ஒருவன் தினை அளவு நன்றி செய்தாலும் அதைச் சிறியது என்று எண்ணாமல் உதவியின் பயனை அறிந்தவர்கள், பனை அளவு பெரிதாகவே கருதுவர்.


Sci quiz

Science Lesson - 1 ...